ஞாயிறு, 22 ஜூன், 2008

அந்தாதி -- இசை, இலக்கியம் பற்றிய ஓர் அலசல்

அந்தாதி

பள்ளியில் தமிழ்மொழியைப் பாடமாகக் கொண்ட அனைவருக்கும் அந்தாதி பற்றித் தெரியாமல் இருக்காது. செய்யுளில் ஒரு பாவின் இறுதியில் வரும் எழுத்தோ, சொல்லோ, சீரோ, சொற்றொடரோ அடுத்த பாவின் முதல் எழுத்தாகவோ, சொல்லாகவோ, சீராகவோ, சொற்றொடராகவோ அமைவது அந்தாதித் தொடை எனப்படுகிறது. ஒன்றின் அந்தம் மற்றொன்றின் ஆதி என்பது இதன் உட்பொருள்

அந்தம் ஆதி இவை இரண்டுமே வடமொழிச் சொற்கள் என்றாலுங்கூட, சமஸ்கிருதத்தில் இத்தகைய யாப்பிற்கு ஏகாவலி என்று பெயர்இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ஒரு மொழியான வடமொழியின் அந்தம்>அந்த>அந்த் என்னும் சொல், அக்குடும்பத்தின் மற்றொரு மொழியான ஆங்கிலத்தின் end--எண்ட்--எந்த் என்பதோடு தொடர்புடையதில் வியப்பெதுவும் இல்லை.

அந்தாதித் தொடையில் அமையும் பாக்களின் தொகுப்பில் மற்றொரு நுணுக்கம் என்னவெனில், தொகுப்பின் இறுதிப் பாடலுக்கு 'அடுத்த' பாடல் தொகுப்பின் முதல் பாடல் ஆகும். அதாவது, தொகுப்பின் இறுதிப் பாடலின் இறுதி எழுத்து, சொல், சீர், சொற்றொடர் முதல் பாடலின் முதல் எழுத்தாகவோ, சொல்லாகவோ, சீராகவோ, சொற்றொடராகவோ அமையும். மனப்பாடமாக பாடல்களை ஓதும்போது பாக்கள் அடுத்தடுத்து நினைவிற்கு வருவதற்காக இத்தகைய நுணுக்கங்கள் கையாளப்பட்டு, ஒட்டுமொத்தத் தொகுப்பும் ஒரு வளையம் போல் கட்டமைக்கப்படுவதால் சில அந்தாதித் தொகுப்புகள் மணிமாலை என்னும் அடைமொழியைப் பெயரில் கொண்டுள்ளன. காரைகால் அம்மையார் பாடிய ஒரு தொகுப்பிற்கு இரட்டை மணிமாலை என்று பெயர்.

அந்தாதியில் வரும் பாவின் வகை இன்ன வகையாக இருக்கவேண்டும் என்று விதிமுறை எதுவும் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் அதன் உட்பிரிவுகள் என்று எதுவாகவும் இருக்கலாம்அல்லது இவைகளின் கலவையாகவும் கூட இருக்கலாம். இத்தொடையில் அமைந்த திருவாசகத்தின் ஐந்தாவது பாடலான திருச்சதகம் வெவ்வேறு பா வகைகளைக் கொண்டுள்ளது. திருச்சதகத்தில் மொத்தம் நூறு பாக்கள் உள்ளன. பத்துப்பத்தாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பத்தும் ஒரே பாவினத்தவையாக அமைந்துள்ளது. சதகம் என்றால் நூறு பாக்களின் தொகுப்பு என்று பொருள். நூறு என்னும் பொருள் கொண்ட சதம் என்னும் சமஸ்கிருதச்சொல்லிலிருந்து பிறப்பது சதகம். ஒரே குடும்பமொழியான ஆங்கிலத்தின் cent என்பதற்கும் சதம் என்பதற்கும் தொடர்புள்ளதைக் காண்க. திருச்சதகத்தில் இடம்பெற்றுள்ள பாவினங்கள் கட்டளைக் கலித்துறை, அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கலிவிருத்தம் போன்றவை. இதில் கட்டளைக் கலித்துறையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

கட்டளைக் கலித்துறையில் வரும் பா (stanza) நான்கு அடிகளைக் கொண்டது. ஒவ்வொரு அடியிலும் ஐந்து சீர் இருக்கவேண்டும், முதல் நான்கு சீர்களும் இயற்சீர் வெண்டளை/வெண்சீர் வெண்டளைப் பெற்று வரவேண்டும், இறுதிச்சீர் விளங்காய்ச் சீராவோ, மாந்தண்பூச் சீராகவோ இருக்கலாம்  என்னும் இலக்கண நுட்பத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு இன்றியமையாத விதிமுறைக்கு வருவோம். அது என்னவென்றால் ஒவ்வொரு அடியிலும் உள்ள உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தமாக குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு அடியின் முதல் சீர் நேரசையில் (~one-syllabic particle) தொடங்கினால் உயிர்/உயிர்மெய் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 16க்கு மிகாமல் குறையாமல் இருக்கவேண்டும், முதல் சீர் நிரையசையில் (~two-syllabic particle) தொடங்கினால் அவற்றின் எண்ணிக்கை 17க்கு மிகாமல் குறையாமல் இருக்க வேண்டும். அப்படி எண்ணும் போது புள்ளிவைத்த ஒற்றெழுத்துக்களை நீக்கிவிட வேண்டும், மேலும் குற்றியலுகரங்களை அவைகளை அடுத்து வரும் உயிரெழுத்துக்களோடு சரிவரப் புணர்த்திய பிறகே கணக்கிட வேண்டும்.

திருச்சதகத்தின் முதல் பத்து பாக்களும் கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன. அதன் முதலிரண்டு பாக்கள்:

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றிச் சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே


My frame before Thy fragrant foot is quivering like an opening bud;
My hands above my head I raise; while tears pour down, my melting soul,
The false renouncing, praises Thee; with songs of triumph praises Thee,
Nor suffer I adoring hand to rest; O Master, look on me!

I ask not the bliss of Indra, Mal, Ayan; though my house and home
Be ruin'd, friendship form I none save with Thine own; though hell's abyss
I enter, I unmurmuring go, if grace dvine appoint my lot;
O King! No other god save Thee I ponder, our Transcendent Good!

திருவாசகத்தின் அடுத்த பாடல் "நீத்தல் விண்ணப்பம்" என்னும் தலைப்பில் அமைந்து 50 பாக்களைக் கொண்டுள்ளது. இந்த ஐம்பதுமே கட்டளைக் கலித்துறையில், அதுவும் அந்த்தாதித் தொடையில் அமைந்துளன. மேலும் மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையார் நூலின் 400 பாக்களுமே கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன. மறைமலை அடிகள் எழுதிய "மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்" என்னும் ஆராய்ச்சி நூலின் அடிப்படையில் பார்த்தால் மாணிக்கவாசகர் காலம் ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. கட்டளைக்கலித்துறை என்னும் பாவினத்திற்கு இவரே முன்னோடியாகக் கூட இருக்கலாம்.

அந்தாதித் தொடையில் கட்டளைக் கலித்துறை அமைப்பைப் பெற்ற மேலும் சில பாடல்கள்: அபிராமிப்பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி, கம்பர் எழுதிய சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி. குறிப்பாக, அபிராமி அந்தாதியானது சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் சகோதரிகள், பாம்பே சாரதா போன்றோரால் பாடப்பட்டிருந்தாலும், பாம்பே சாரதா அவர்கள் கையாண்டுள்ள மெட்டானது கட்டளைக்கலித்துறையில் அமைந்த மற்ற பாடல்களுக்கும் உகந்ததாக உள்ளது. அந்த மெட்டைக் கேட்டவர்கள் அதே மெட்டில் மற்ற கட்டளைக் கலித்துறைப் பாடல்களையும் பாடிவிடலாம்.

திருச்சதகத்தின் இன்னொரு பா:

ஈச னேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி
நாச னேநான் யாதும்ஒன் றல்லாப் பொல்லா நாயான
நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே!

இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையைச் சேர்ந்தது. இதன் மொழிபெயர்ப்பு:

O Master, O my Mighty One, my Father, Perumaan, my births'
Destroyer, Thou Who mad'st me Thine, an evil wholly worthless dog,
And thoroughly base; I cannot think, Thou see'st--of any meet return to Thee,
O Shining One, Lord of the Porch, nor know I aught that I can do.

திருவாசகம் முழுமையும் யாரும் பாடல்களாகப் பாடியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படி பாக்களைப் பார்க்கும் போது இதனைப் பாடலாகப் பாடினால் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றும். எனக்கோ சங்கீதத்தில் துளியும் ஞானமில்லை. அதனால் திரைப்பட பாடல் மெட்டில் நானே சில நேரங்களில் பாடிக்கொள்வதுண்டு. இப்படித் திரைப்பட பாடல் மெட்டில் சமய இலக்கியங்களைப் பாடுவதில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மேற்கண்ட 'ஈசனே' எனத் தொடங்கும் பாடலை "காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்" என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

திருச்சதகத்தில் பத்தாவது பத்து இவ்வாறு தொடங்குகிறது:

மாறி லாதமாக் கருணை வெள்ளமே
          வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை
வேறி லாப்பதப் பரிசு பெற்றநின்
          மெய்ம்மை அன்பருண் மெய்ம்மை மேவினார்

இந்த வரிகளை, 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி' என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

மேலும், 32 மற்றும் 33  ஆம் பாடல்களான பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து ஆகியவை அந்தாதித் தொடையில் அமைந்த அறுசீர் கழிநெடிலடி ஆசிரிப்பாக்கள் ஆகும். ஒரு மேற்கோள்:

கலந்து நின்னடி யாரோடு
       அன்று வாளாக் களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள்
       புகுந்து நின்ற திடர்பின்னாள்

இவைகளை, உதாரணமாக, கவலை இல்லா மனிதன் படத்தில் இடம்பெற்ற "பிறக்கும் போதும் அழுகின்றாய்" என்னும் பாடல் மெட்டில் பாடலாம்.

திருமூலர் மூவாயிரம் பாக்களைக் கொண்ட தனது திருமந்திரத்தில் அந்தாதித் தொடையிலும் சில பாக்களை இயற்றியுள்ளார். இவரும் ஒருவகையான கட்டளையையே திருமந்திரம் முழுக்கக் கையாள்கிறார் --உயிர்/உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை பதினொன்று பன்னிரண்டு என அமைகின்றன. இத்தகைய செய்யுளுக்கென்று தனிப்பெயர் எதுவுமில்லை போலும்.

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு 
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து 
உண்ணின் றுருக்கியொர் ஒப்பிலா ஆனந்தக்    
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.


He came down from Heaven, clothed in body,
Karma to match, stretched forth His cool Feet of Grace, planting them firm
On my head; and lo! inside me He stood, melting my yielding heart;
And filled my eyes with peerless bliss, past all compare,
All impurity dispelled.

வெறும் மொழிபெயர்ப்புகள் உட்பொருளை விளக்கிவிடா.  

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவச மெட்டில் ஒட்டுமொத்த திருமந்திரத்தையும் பாடிவிடலாம். இந்த மெட்டில் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்த பாக்களையும் பாடலாம். இந்த பாவினத்தில் அமைந்த சில படைப்புகள்: திருவாசகத்தின் இரண்டாவது பாடலான "கீர்த்தித் திருஅகவல்",  நான்காவது பாடலான "போற்றித் திரு அகவல்", மற்றும் சிலப்பதிகாரத்தில் குரவைப் பாட்டு, கானல் வரி பாடல் போன்றவை தவிர மற்ற அனைத்துக் காதைகளும், மணிமேகலையின் அனைத்துக் காதைகளும். ஆசிரியப்பா அகவல் ஓசையைப் பெற்று வருவதால், அத்தகைய அகவல் ஓசை கொண்ட மெட்டுக்களையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என்னும் பாடல் மெட்டு. போற்றித் திரு அகவலில் போற்றி போற்றி என முடியும் ஒரு பாதிக்கு இந்த மெட்டு பொருத்தமாக இருக்கும்.

மற்றொமொரு சித்தர் போகர் இயற்றிய 'போகர் ஏழாயிரம்' என்னும் திரட்டில் மருத்துவம், யோகம், தன்வரலாறு, பிற சித்தர்கள் வரலாறு பற்றி ஏழாயிரம் பாக்கள் உள்ளன. ஏழாயிரத்தில் ஒரு சில பாக்களைத் தவிர,  இவை பெரும்பாலும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. தனது மாணவன் புலிப்பாணிக்குப் போதிப்பது போல் இதனை இயற்றியுள்ளார். அதனால்தான், நினைவில் நிறுத்துவதற்கு அந்தாதியைக் கையாண்டுள்ளார் போலும். விண்ணில் பறக்கும் தேர் ஒன்றைத் தான் உருவாக்கியதைப்  பற்றியும் (1868-1880), நீராவியால் இயங்கும் ஒரு மாபெரும் கப்பல் கட்டியதையும் (1926-1943) அதில் பிற சித்தர் முனி ரிஷிகளுடன் உலகம் முழுவதையும் தான் சுற்றிவந்ததையும் கூட (1946), போகர் விவரிக்கிறார்:

செய்யவே மராமரக் கப்பல் தானும்
        சிறப்பாக ஆயிரம் கூட்டத் தோடும்
பையவே சூத்திரமா மரக்க லந்தான்
         பாருலகில் சீனபதி யார்கள் மெச்ச
மெய்யவே நீளமது கெஜமெண் ணூறு
        மெதிரான வகலமது கெஜனே நூறு
பெய்யவே சதுரமது தீர்மா னித்து
        பிசகின்றி முடித்தவகை கூறு வேனே. (1927)

மாச்சப்பா இடப்பக்கம்தண் ணியது நிற்க,  
       அப்பனே, குழலொன்றுசமைத் திட்டேன் யானும். 
மூச்சப்பா போகாமல்குழை களுக்கும் புக்கு
       முளையான தண்ணீரும்கொதிக் குமிக வேளை 
வாச்சமுடன் தான்திறந்துதண் ணீரும் ஆவி 
       மற்றுமுள்ள குழைகளுக்குதா னருந்தி யோட   
காச்சநீ ராவிகுழல் தனிலே புகுந்து 
       கருவான சக்கரத்தைதிருப் பமிக லாச்சே! (1940)

கப்பலின் நீளம் எண்ணூறு கெஜமாம். கிட்டத்தட்ட 720 மீட்டர். 1912-ஆம் ஆண்டு மூழ்கிய டைட்டானிக் கப்பலின் நீளம் 269 மீட்டர் தான். ஏழாயிரம் எழுதப்பட்ட காலம், அதன் முழு உரை போன்ற ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. மேற்கொண்டு இதைப்பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: